அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளிநாடு செல்வதற்குத் தடைவிதித்தார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்காவின் மின்சார மற்றும் புதுப்பிக்கவல்ல சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளிநாடு செல்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தடை விதித்துள்ளார்.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள திடீர் மின்சாரத் தடைகளால் சிறிலங்கா அரசாங்கம் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில், மின்சாரத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் வெளிநாடு செல்வது பொறுப்பற்ற செயல் என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளிநாடு செல்வதற்கு முன்னரே திட்டமிட்டிருந்தார். இந்தப் பயணத்தையே சிறிலங்கா அதிபர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அதேவேளை, இந்தப் பயணத்தை கைவிட அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஏற்கனவே முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி இரண் நாட்களில் தீர்ந்து விடும் என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.