பேரணியில் பங்கேற்றால் நாடாளுமன்ற ஆசனம் பறிபோகும் – எஸ்.பி.திசநாயக்க எச்சரிக்கை
கொழும்பு- ஹைட்பார்க் மைதானத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் நாளை நடத்தவுள்ள பேரணியில், பங்கேற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான எஸ்.பி.திசநாயக்க.
“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைமையின் உத்தரவை மீறி செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டால், நாடாளுமன்ற ஆசனத்தையும் இழக்க நேரிடும்.
முன்னர், ஐதேகவைச் சேர்ந்த காமினி திசநாயக்க, லலித் அத்துலத்முதலி போன்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்களை அப்போது கட்சியின் தலைவராக இருந்த ஆர்.பிரேமதாச கட்சியில் இருந்து நீக்கினார்.
அப்போது, கட்சியை விட்டு நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
நாளை கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தும் பேரணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ, நாட்டுக்கோ விரோதமானது.
இந்தப் பேரணியில் பங்கேற்பவர்களுக்கு எதிராக கட்சித் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.