ஜி.எஸ்.பி வரிச்சலுகை தேவையா? – சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை
சிறிலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகை தேவையென்றால், நல்லாட்சியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் நிவென் மிமிகா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின், அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நிவென் மிமிகா, நேற்று பிரித்தானியத் தூதரக வளாகத்தில் ஐரோப்பிய் ஒன்றியத்தின் புதிய பணியக வளாகத்தை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இணைந்து திறந்து வைத்தார்.
இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே, இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
“மைத்திரிபால- ரணில் அரசாங்கத்தின் காலத்தில், கடந்த ஒரு ஆண்டில், சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலை, ஜனநாயகம் என்பனவற்றில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளிலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற வேண்டுமானால், மனித உரிமைகள், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி போன்றவற்றில், சிறிலங்கா இன்னும் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.