தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்த நகைமுகன் மதுரையில் காலமானார்
தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த ஊடகவியலாளரும்- தனித் தமிழர் சேனையின் தலைவருமான க.நகைமுகன் தனது 66 ஆவது வயதில் நேற்று மதுரையில் காலமானார்.
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த இவர், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.
1990ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நகைமுகன் கைது செய்யப்பட்டிருந்தார்.
ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர், இந்தியாவில் ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு பலரும் குரல் கொடுக்கத் தயங்கிய கால கட்டத்தில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவும் காரணமாக இருந்தவர் நகைமுகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நகைமுகன், மதுரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் காலமானார்.
நகைமுகனின் இறுதிச் சடங்கு இன்று அவரது சொந்த ஊரான தெக்கூரில் நடைபெறவுள்ளது.
நகைமுகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.