யோசித ராஜபக்சவுக்குப் பிணை – வெளிநாடு செல்லத் தடை
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கடுவெல நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட யோசித ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
கடுவெல நீதிமன்றத்தின் விளக்கமறியல் உத்தரவுக்கு எதிராக யோசித ராஜபக்ச சார்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று மீளாய்வு செய்யப்பட்ட போதே, யோசித ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஹெய்யந்துடுவ உத்தரவிட்டார்.
கடுவெல நீதிவான் நீதிமன்றத்துக்கு இந்த பிணை உத்தரவை உடனடியாக அனுப்பி வைக்கவும் அவர் பணித்தார்.
ஒரு இலட்சம் ரூபா காசுப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் பெறுமதியான இருவரின் சரீரப் பிணையிலும், யோசித ராஜபக்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, யோசித ராஜபக்சவுடன் கைதான ஏனைய நால்வரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிபதி அனைவரையும் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்துள்ளார்.
பிந்திய செய்தி
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட யோசித ராஜபக்ச, இன்று பிற்பகல் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.