மேலும்

அனைத்து மின்சார நிலையங்களும் சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைப்பு – மைத்திரி அவசர உத்தரவு

maithriநாடு முழுவதிலும் உள்ள அனைத்து மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் உபமின் நிலையங்களில் சிறிலங்கா இராணுவத்தினரை நிறுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.

மின் நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது தடவையாக நேற்று நாடு முழுவதிலும் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையை அடுத்து இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நாடு முழுவதற்குமான மின்சார விநியோகம் தடைப்பட்டது. சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக இது நீடித்தது.

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் நேற்றிரவு 10.30 மணி வரை மின்சாரத் தடை நீடித்தது.

பிரதான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட திடீர் கோளாறினை அடுத்தே இந்த மின்சாரத் தடை ஏற்பட்டது.

இது சதி வேலையாக இருக்கலாம் என்று சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ள நிலையிலேயே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மின்சார நிலையங்கள் அனைத்தையும், சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வர உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *