கொழும்புத் துறைமுகத்தில் பிரித்தானிய நாசகாரி
பிரித்தானிய கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று இன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பிரித்தானியப் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு வந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் எச்எம்எஸ் டிபென்டர் என்ற இந்த நாசகாரி போர்க்கப்பல், எரிபொருள் மற்றும் விநியோகத் தேவைகளுக்காகவே கொழும்புத் துறைமுகம் வந்துள்ளது.
பிரித்தானியா மற்றும் சிறிலங்காவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் முன்னேற்றமடைந்து வருவதை, வெளிப்படுத்தும் ஒரு சமிக்ஞையாக இந்தப் போர்க்கப்பலில் வருகை குறிப்பிடப்படுகிறது.
பிரித்தானியாவில் கட்டப்பட்ட ரைப் 45 ரக நாசகாரியான, எச்எம்எஸ் டிபென்டர், உலகின் மிக முன்னேற்றகரமான போர்க்கப்பலாகும்.
முதன்மை விமான எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதி, நடுத்தரத் தொலைவு பீரங்கி, மற்றும் கடல் நடவடிக்கைகளுக்கான உலங்குவானூர்தி என்பனவற்றை இந்த நாசகாரி கொண்டுள்ளது.