சீனப் போர்க்கப்பல்களுடன் வந்த நீர்மூழ்கி எங்கே?- இந்தியா தீவிர தேடுதல்
இந்தியாவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும், சீன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் இந்தியக் கடற்படையும், விமானப்படையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிந்த சீனக் கடற்படையின் நீர்மூழ்கி ஒன்றும், இரண்டு ஏவுகணைப் போர்க்கப்பல்களும், ஒரு விநியோக கப்பலும், கடந்த 3ஆம் நாள் சீனாவுக்குப் புறப்பட்டன.
சீனா செல்லும் வழியில், கராச்சி துறைமுகத்தில் தரித்து நின்ற இந்தக் கப்பல்கள், அங்கு பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பலுடன் பயற்சியில் ஈடுபட்டன.
அங்கிருந்து புறப்பட்ட சீனக் கடற்படையின் இரு ஏவுகணைப் போர்க்கப்பல்களும், ஒரு விநியோக கப்பலும் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கின்றன.
எனினும், சீன நீர்மூழ்கிக் கப்பல் எங்கு சென்றது என்று தெரியாத நிலையில், இந்தியக் கடற்படை, விமானப்படை என்பன தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளன.
கொழும்பில் தரித்துள்ள சீனப் போர்க்கப்பல்கள், நாளை அங்கிருந்து புறப்பட்டு பங்களாதேசின் சிட்டகொங் துறைமுகத்துக்குச் செல்லவுள்ளன.
இதனால், இந்த அணியில் இடம்பெற்றிருந்த சீன நீர்மூழ்கி, வங்காள விரிகுடா கடற்பகுதியில் தரித்து நிற்கலாம் என்று இந்தியா சந்தேகிக்கிறது.
இந்தியக் கடற்படை வரும் பெப்ரவரி 6 ,7ஆம் நாள்களில் அனைத்துலக கடற்படைப் போர்ப்பயிற்சி ஒன்றை விசாகப்பட்டினத்தில் நடத்தவுள்ளது.
விசாகப்பட்டினத்தைக் கடந்தே, வங்காள விரிகுடாவுக்குள் சீனப் போர்க்கப்பல்கள் நுழையும் என்பதால், இந்தப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் உள்ள இந்தியக் கடற்படைத்தளத்தில் இருந்து நீர்மூழ்கிகளைக் கண்டறியும் நவீன வசதிகள் கொண்டவிமானங்கள் அந்தமான் -நிகோபார்தீவுகள் வரையில் கடந்த ஒரு வாரமாக தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.