வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய அனைத்துலக உதவியுடன் சிறப்பு நிதியம் – சிறிலங்கா பிரதமர்
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் நோக்கில், சிறப்பு நிதியம் ஒன்று இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்.
மக்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட பின்னர், பொதுவாக்கெடுப்புக்கு விடப்படும்.
முப்பது ஆண்டு போரினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இதனால் அப்பகுதி இளைஞர்கள், யுவதிகள் தொழிலின்றி இருக்கின்றனர்.
போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்குரிய காணிகளை விடுவித்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டியுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு, ஜப்பானின் உதவியுடன் சிறப்பு பொருளாதார அபிவிருத்தி மாநாட்டை வடக்கு, கிழக்கில் நடத்தவுள்ளோம்.
இதனூடாக வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக சிறப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.