மேலும்

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற்றாலே நீதி கிடைக்கும் – முதலமைச்சர்

cm-meet-walk-demo (1)சிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி வடக்கு மாகாணசபை உறுப்பினர்களால் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்தின் முடிவில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டது.

அதனைப் பெற்றுக்கொண்ட பின்னர், கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர்,

“உங்களின் வேதனைகளை நன்கு அறிவேன். அதனால்தான், காணாமல்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட, இனப்படுகொலை சம்பந்தமான அறிக்கைகளையும், தீர்மானமாக நிறைவேற்றியதுடன், உரியவர்களிடம் அறிக்கைகளை சமர்பித்துள்ளோம்.

நீதிமன்றில் இருக்கும் போது, குற்றவாளிகளை விசாரித்து தண்டனைகளை வழங்குவோம், இது அரசியலுடன் சம்பந்தப்பட்டுள்ளதால், அவ்வாறு வழங்க முடியாது.

அதேபோன்று நாட்டின் நன்மைகளை பார்த்தே நடவடிக்கை எடுக்கின்ற காரணத்தினால் தான், காணாமல்போனோர் மற்றும் அனைத்துலக நீதி விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகின்றது.

cm-meet-walk-demo (1)

cm-meet-walk-demo (2)

இந்த அரசாங்கம் அரசியல் கைதிகளை எப்போதே விடுவித்திருக்க முடியும். தற்போதைய அரசாங்கத்திற்கு கடந்த அதிபர் தேர்தலில் மிகப்பெரியளவிலான வெற்றியைக் கொடுத்திருந்தார்கள் தமிழ் மக்கள். எனவே, அரசியல் கைதிகளை பெருவாரியாக விடுதலை செய்திருக்கலாம்.

சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளலாம் தானே என அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் கேட்டபோது, அனைத்துலக  விசாரணையை எடுத்தால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் எனக் கூறினார்.

அதனால், அனைத்துலக  விசாரணை மேற்கொள்ள முடியாது என்றும், அதனால் தான் சிறிலங்காவின் உள்ளக விசாரணையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளக விசாரணையை மேற்கொண்டிருந்தாலும், அனைத்துலக  விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் கொண்ட குழுக்கள் உள்ளடக்கப்பட வேண்டும். உள்ளூர் நீதிபதிகளின் கருத்துக்களுக்கு மாறாக வெளிநாட்டு நீதிபதிகள் கருத்துக்கூறக் கூடிய நிலையை அமைக்க வேண்டும்.

அத்துடன் வெளிநாட்டில் இருந்து சுதந்திரமான வழக்கு நடத்துநர் ஒருவரையும் சிறிலங்காவுக்கு அழைத்து வர வேண்டும்.

உள்நாட்டில் சட்டங்கள் இல்லை என்றால் அதற்கு ஏற்ற சட்டங்களை இங்கு உருவாக்க வேண்டும். இவ்வாறு வெளிநாட்டு அனுசரணையுடன், முழுமையான விசாரணை நடந்தால் மட்டுமே, தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும் இல்லாவிட்டால் நீதி கிடைக்காது.

உள்நாட்டு பொறிமுறையின் கீழ் எந்த விசாரணை நடைபெற்றாலும், நியாயம் கிட்டாது.

இங்குள்ள நீதிபதிகளைப் பற்றி எமக்கு தெரியும். பெரும்பான்மையின நீதிபதிகள் பற்றியும், சிறுபான்மை நீதிபதிகளைப் பற்றியும் நன்றாக தெரியும். பெரும்பான்மையின நீதிபதிகளை விட சிறுபான்மையின நீதிபதிகள் அதிகமாக பயப்படுவார்கள்.

தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய நீதியைப் பெற்றுத் தரக்கூடிய வகையில் அந்தப் பொறிமுறை அமையாவிட்டால், அந்த உள்நாட்டு விசாரணைக்கு செல்வது பயனற்றது.

எனவே, தான் அனைத்துலக பொறிமுறையினை அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம். அதனை வலியுறுத்தி நீங்களும் நடை பயணத்தினை மேற்கொண்டு வந்துள்ளீர்கள். இதை உரியவர்களுக்கு அனுப்புவோம்.

ஆனால் எந்த அளவிற்கு நன்மை கிடைக்குமென்று தெரியாது. எமது கடமைகளை சரியாக செய்து வருவதாக வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் எமது பிரச்சினை என்னவென்று வெளியுலகத்திற்கு நன்றாக தெரிந்திருக்கின்றது.

ஆனால், பல அரசியல் காரணங்களின் நிமித்தம் சில தடங்கல்களும் கட்டுப்பாடுகளும் வந்து கொண்டிருக்கின்றன. உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *