திருகோணமலையில் நடந்த கி.பி.அரவிந்தன் பற்றிய ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ நூல் அறிமுகம்
ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும் கவிஞருமான, கி.பி.அரவிந்தன் அவர்கள் பற்றி, பாலசுகுமாரால் தொகுக்கப்பட்ட ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ நூல் அறிமுக நிகழ்வு நேற்று மாலை திருகோணமலையில் இடம்பெற்றது.
திருகோணமலையில் சமூக மற்றும் அரசியல் உரையாடல்களில் ஈடுபட்டுவரும் முன்னணி அமைப்பான அறிவோர் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தநிகழ்வில், அரசியல் ஆய்வாளர் யதீந்திரா, கவிஞர் பவித்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈரோஸ் அமைப்பின் முன்னைநாள் உறுப்பினருமான நாகேஸ்வரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் சுரேஸ் ஆகியோர் உரையாற்றினர்.
யதீந்திரா தனது தலைமை உரையில் கி.பி.அரவிந்தன் தன்னுடைய வாழ்நாளில் யாராகவெல்லாம் இருந்தார் என்னும் கேள்வியின் அடிப்படையில், அவரது ஆரம்பகாலம், ஈரோஸ் காலம், பின்னர் புலம்பெயர் காலம் ஆகிய மூன்று காலத்தின் அடிப்படையில் தன்னுடைய அவதானங்களை பகிர்ந்து கொண்டார்.
கவிஞர் பவித்திரன், அரவிந்தனின் கவிதை வீச்சுக்கள் பற்றி உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய நாகேஸ்வரன், கி.பி.அரவிந்தனுக்கும் தனக்குமுள்ள ஈரோஸ் தொடர்புகள் பற்றியும், அவரது முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினார்.
கி.பி.அரவிந்தன் எழுப்பியிருக்கும் சொல் யாராக இருக்கலாம் நான் என்பது அவரை நோக்கியது மட்டுமல்ல நாங்கள் ஒவ்வொருவரும் எங்களை நோக்கியும் கேட்கக் கூடிய கேள்வியாகவும் இருக்கிறது என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.