ஜெனிவாவில் சிறிலங்கா குறித்த முறைசாராக் கூட்டங்களுக்கு ஏற்பாடு
ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான பல முறைசாராக் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக, இந்த முறைசாராக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை, உள்ளிட்ட முன்னணி மனித உரிமை அமைப்புகள், இந்தக் கூட்டங்களுக்காக ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தின் அறைகளை முன்பதிவு செய்துள்ளன.
மேலும், அனைத்து வகையான பாகுபாடுகள், இனவாதத்துக்கு எதிரான அனைத்துலக அமைப்பு, பசுமைத் தாயகம், அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட மக்களின் சமூகம், உள்ளிட்ட அரசசார்பற்ற நிறுவனங்களும் சிறிலங்கா தொடர்பான முறைசாரா கூட்டங்களை ஒழுங்கு செய்துள்ளன.
இந்தக் கூட்டங்களில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
அதேவேளை, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வருவது தொடர்பாக, வரும் வியாழக்கிழமை, அமெரிக்காவும் ஒரு முறைசாராக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.