விசாரணை அறிக்கை மிகத்தீவிரத்தன்மை கொண்டது – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை நாளை மறுநாள் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இந்த அறிக்கையின் கண்டறிவுகள் மிகத் தீவிரத் தன்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் தொடக்கவுரை நிகழ்த்திய போதே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் மோசமான மீறல்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளை எதிர்கொண்டோம்.
அந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஒரு நகர்வாக, பொறுப்புக்கூறல் அவசியம் என்று இந்தப் பேரவை ஆழமான செயற்பாட்டில் ஈடுபட்டது.
2014 மார்ச்சில் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மேற்கொண்ட விரிவான விிசாரணையின் அறிக்கையை- எனது பரிந்துரைகளையும் உள்ளடக்கியதாக வரும் புதன்கிழமை வெளியிடுவேன்.
இந்த விசாரணையின் கண்டறிவுகள் மிகத் தீவிரத் தன்மையுடையவை.
கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்த விடயத்தில் காட்டிய அக்கறையையும், அவரது தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகளையும் வரவேற்கிறேன்.
ஆனால் அதன் சொந்த நம்பகத்தன்மையை, முடிவுகளை அளிக்கும் பொறுப்புக்கூறல் செயல்முறைகளை உறுதிப்படுத்தும் கடந்த காலத் தவறுகளுக்கு அப்பால் தீர்க்கமான நகர்வுகளை மேற்கொள்ளும், மீண்டும் நடக்காது என்ற உத்தரவாதத்தை அளிக்கும் ஆழமான நிறுவன மாற்றங்களைக் கொண்டு வரும் பொறுப்பை இந்தப் பேரவை இலங்கையர்களுக்கும், கொடுக்க வேண்டியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.