ஜெனிவா கூட்டத்தொடர் ஆர்வம்மிக்க அமர்வாக இருக்கும் – ஐ.நா மனித உரிமை பேரவைத் தலைவர்
ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஆர்வம்மிக்கதொன்றாக அமையும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோகிம் ரூக்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்ட, முன்னாள் ஜேர்மனிய இராஜதந்திரியான ஜோகிம் ரூக்கர் பிரிஐக்கு வழங்கியுள்ள செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-
“சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனது பணியகம் மேற்கொண்ட விசாரணையின் கண்டறிவுகளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், பேரவைக்குச் சமர்ப்பிக்கவுள்ளார்.
மீண்டும் ஒரு முறை, இது ஆர்வம்மிக்க ஒரு அமர்வாக இருக்கும்.
நாடுகள் தொடர்பாக, குறிப்பாக, கொங்கோ ஜனநாயக குடியரசு, குறித்து சிறிலங்கா குறித்து பேசப்படவுள்ளது. உக்ரேன் குறித்தும், சிரியா குறித்தும் மீண்டும் ஒருமுறை பேசுவோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.