தென்னாபிரிக்க அதிபர் சூமாவை கட்டுநாயக்கவில் சந்தித்துப் பேசினார் மங்கள சமரவீர
சீனா செல்லும் வழியில் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சீனாவில் நடைபெற்ற போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா நேற்றுமுன்தினம் பீஜிங் சென்றார்.
பீஜிங் செல்லும் வழியில், தென்னாபிரிக்க அதிபர் பயணம் செய்த, அந்த நாட்டின் விமானப்படை விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரித்து நின்றது.
அப்போது. தென்னாபிரிக்க அதிபரை வரவேற்ற சிறிலங்கா வெளிவவிகார அமைச்சர் மங்கள சமரவீர, அவருடன் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.