உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் – அமெரிக்க அதிகாரிகளிடம் முதலமைச்சர் தெரிவிப்பு
தமிழின அழிப்பு, போர்க்குற்றங்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்கும் என்று நம்பவில்லை. அனைத்துலக விசாரணையே வேண்டும். என்பதே, எமது மக்களின் நிலைப்பாடு என்று அமெரிக்க செனட் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ள நிலையில், அதுபற்றி ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அறிந்து கொள்வதற்காக, இரண்டு அமெரிக்க செனட் உயர் அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் சந்திப்புகளை மேற்கொண்ட இவர்கள், நேற்று யாழ்ப்பாணம் வந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில், முதலமைச்சரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
“அமெரிக்க செனட்அதிகாரிகள், அதிபர் தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
ஜனவரி 8 ஆம் நாளுக்குப் பின்னர் தேசிய ரீதியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தளவில் நீண்டகாலமாக காணப்பட்டு வரும் பிரச்சினைகளுக்கு எந்த நன்மையும், தீர்வும் எட்டப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன்.
குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிகளவான இராணுவ பிரசன்னம் மற்றும் தமிழர்களுக்குச் சொந்தமான பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை என்பவற்றை குறிப்பிட்டிருந்தேன்.
மேலும் மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் அதிகாரங்களை தன்னிடம் வைத்துள்ளது. அதனை மாகாண சபைக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கவில்லை என்பதையும் அவர்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தேன்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்களா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரை உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை. அத்தகைய நிலைப்பாட்டிலே வடமாகாணசபையும் உள்ளது.
இந்தநிலையிலேயே வடமாகாண சபையில் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலகத்துடன் இணைந்த உள்ளக விசாரணையே கொண்டு வரப்படும் என்பதே சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய நிலையில் எமது மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளமைக்கு உள்ளக விசாரணை மூலம் எத்தகைய நீதியும் கிடைக்காது.
அவற்றில் எமக்கு நம்பிக்கையில்லை என்ற நிலை யிலேயே அனைத்துலக விசாரணை வேண்டும் எனக் கோருகிறோம்.
இதற்கான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கவேண்டும் என அவர்களிடம் கேட் டுக்கொண்டேன்” என்ற அவர் தெரிவித்தார்.