மேலும்

அமைச்சர்கள் தொகை அதிகரிப்புக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

parliamentசிறிலங்காவில் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் 127 மேலதிக வாக்குகளால்,நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கையை, 48 ஆகவும், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆகவும் அதிகரிக்கும் பிரேரணை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விவாதங்களை அடுத்து, இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், பிரேரணைக்கு ஆதரவாக 143 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 16 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 64 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்றவில்லை.

ஜேவிபி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்களும், உதய கம்மன்பிலவும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பு நேரத்தில் சபையில் இருக்கவில்லை.

மகிந்த ராஜபக்சவும்  வாக்களிப்பு நேரத்தில் சபையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நிலையில், நாளை காலை புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *