சிறிலங்காவின் புதிய அமைச்சர்கள் இரண்டு கட்டங்களாக இன்று பதவியேற்கின்றனர்
சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடக்கவுள்ள முதற்கட்ட நிகழ்வில், அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக பதவியேற்கவுள்ளனர்.
பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பிற்பகல் 3 மணியளவில் அதிபர் செயலகத்தில் நடக்கும் இரண்டாவது கட்ட நிகழ்வில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக பதவியேற்கவுள்ளனர்.
45 அமைச்சர்கள் மற்றும் 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதால், ஒரே தடவையில் பதவியேற்க நீண்ட நேரம் தேவைப்படும் என்பதாலேயே இரண்டு கட்டங்களாக இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இன்று பதவியேற்கவுள்ள 45 அமைச்சர் பதவிகளில், 33 பேர் ஐதேகவையும், 12 பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் சேர்ந்தவர்களாக இருப்பர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.