நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவு
சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கூடிய சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
சபாநாயகராக கரு ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டதையடுத்து, பிரதி சபாநாயகர் தெரிவு நடந்தது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் பெயரை, நிமால் சிறிபால டி சில்வா முன்மொழிய, ரவூப் ஹக்கீம் வழிமொழிந்தார். அதையடுத்து திலங்க சுமதிபால பிரதி சபாநாயகராக ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
அதையடுத்து. குழுக்களின் பிரதித் தலைவர் பதவிக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பெயரை, கூட்டமைப்பின் மற்றொரு உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் முன்மொழிய, ஐதேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார்.
இதையடுத்து, செல்வம் அடைக்கலநாதனின் நியமனமும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதேவேளை, அவைத்தலைவராக லக்ஸ்மன் கிரியெல்லவும், ஆளும்கட்சியின் பிரதம கொரடாவாக கயந்த கருணாதிலகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நாடாளுமன்ற அமர்வுகள் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குழுக்களின் பிரதித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வன்னி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நாடாளுமன்றத்தில், ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முருகேசு சந்திரகுமார் குழுக்களின் பிரதித் தலைவராக பதவி வகித்திருந்தார்.