மகிந்த ஆதரவு அணியின் பலம் 60 ஆக குறைந்தது – எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மறுக்கிறார்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலம் 60 ஆக குறைந்துள்ளது. மகிந்த ராஜபக்சவினால் நேற்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் கூட்டப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், 60 பேர் மட்டும் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில், சுசில் பிரேமஜெயந்த உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் பங்கேற்கவில்லை.
நேற்று சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடந்த இந்தக் கூட்டத்தில், தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், தாம் உள்ளிட்ட இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 60 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், பங்கேற்ற உறுப்பினர்கள், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்கும் படி வலியுறுத்தியிருந்தனர்.
ஆனால், தாம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்கப் போவதில்லை என்றும், பின்வரிசை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அமரப் போவதாகவும், கூறிய மகிந்த ராஜபக்ச, தேவைப்பட்டால், தேசிய பாதுகாப்புக்குத் தலைமைத்துவம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்பதற்கு இணங்குவார் என்று வாசுதேவ நாணயக்காரவும், பிரசன்ன ரணதுங்கவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 83 பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான போதிலும் அவர்களில், 60 பேர் மட்டுமே, மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் அணியில் தற்போது இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே மகிந்தவுக்கு ஆதரவான அணியில் இருந்த சுசில் பிரேமஜெயந்த உள்ளிட்ட பலரும், அங்கிருந்து விலகி, மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.