தாஜுதீன் கொலை: சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கப் பணிப்பாளரிடம் 6 மணிநேரம் விசாரணை
சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெகத் அபேநாயக்கவிடம், ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வசீம் தாஜுதீனைக் கடத்திச் சென்று கொலை செய்வதற்கு, சிராந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய என்ற அரசசார்பற்ற நிறுவனத்துக்குச் சொந்தமான டிபென்டர் வாகனமே பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனம் ஏற்கனவே சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிராந்தி ராஜபக்சவின் கோரிக்கையின் பேரில், இந்த வாகனத்தை, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம் சிரிலிய சவிய நிறுவனத்துக்கு வழங்கியிருந்தது.
இதனை சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியிருந்த அதேவேளை, தாம் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்தநிலையில், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெகத் அபேநாயக்கவிடம், செஞ்சிலுவைச் சங்க வாகனத்தை எவ்வாறு சிரிலிய சவிய நிறுவனத்துக்கு வழங்க முடியும் என்று ஆறு மணி நேரமாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் சட்டவிதிகளின் படி ஒரு வாகனத்தை மற்றொரு நிறுவனத்துக்கு வழங்க முடியாது என்று குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.