இந்தியாவின் தரைவழிப்பாதை திட்டம் சிறிலங்காவுக்குத் தெரியாதாம்
இந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்கும் வகையில் பாக்கு நீரிணை வழியாக நெடுஞ்சாலை மற்றும் தொடருந்துப்பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியா தம்முடன் எந்த பேச்சுக்களையும் நடத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீன செய்தி நிறுவனமான சின்ஹூவாவுக்கு சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா அளித்துள்ள செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், தொடருந்து மற்றும் நெடுஞ்சாலை மூலம் இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகங்களிலேயே செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இந்திய அரசாங்கம், சிறிலங்காவுடன் எந்த கலந்துரையாடலையும் நடத்தவில்லை.
இந்தியப் பிரதமர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோரின் அண்மைய சிறிலங்கா பயணங்களின் போது இதுகுறித்து எம்முடன் எதுவும் பேசப்படவில்லை.
இந்த திட்டம் சிலரது கற்பனைத் திட்டமாகவே தெரிகிறது. இத்தகையதொரு திட்டம் இருந்தால், அது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனுப்பப்படும்.
அது சுவாரசியமானதாக இருக்கும். இந்த நகர்வின் சாதக பாதகங்களை- குறிப்பாக சமூக பொருளாதார தாக்கங்கள் குறித்து கவனமாக ஆராய வேண்டும்.
இது ஒரு பாரிய திட்டம் என்பதால், எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னர், முற்றுமுழுதாக ஆராயப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.