இன்று புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரி
நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கன் விமான சேவையின், பயணிகள் விமானம் மூலமே, மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி செல்லவுள்ளார்.
இன்று பிற்பகல் புதுடெல்லியை சென்றடையும் அவருடன், 16 பேர் கொண்ட குழுவொன்றும் செல்லவுள்ளது.
இந்தக் குழுவில் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, சுவாமிநாதன் ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து நேரடியாக புதுடெல்லி சென்று சிறிலங்கா அதிபருடன் இணைந்து கொள்வார்.
இன்று பிற்பகல் புதுடெல்லியை சென்றடையும் மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி, ஆகியோரையும், ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேசுவார்.
வரும் செவ்வாய்க் கிழமை காலை புத்தகயா செல்லும் மைத்திரிபால சிறிசேன, அங்கிருந்து திருப்பதிக்குச் செல்வார்.
திருப்பதியில் செவ்வாய் இரவு வழிபாடுகளை முடித்துக் கொண்டு, புதன்கிழமை காலையில், கொச்சி வழியாக கொழும்புக்குத் திரும்புவார்.
சிறிலங்கா அதிபருக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின் போது, தமிழர் பிரச்சினை, நல்லிணக்கம், பொருளாதார ஒத்துழைப்பு, மீனவர்களின் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.
இந்தப் பயணத்தின் போது, பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளன.