அனுரகுமார, அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள்?
சிறிலங்கா அரசாங்கத்தில், நிதி அமைச்சராக பணியாற்றும் அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டு வர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள், மோசடியான முறையில் வெளிநாட்டுக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, கிழக்கு மாகாண இராணுவத் தளபதியாகப் பணியாற்றி வந்த போது, மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாதுகாப்பு பிரதி அமைச்சராக உள்ள அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் இந்த இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கும் கையொப்பங்களைச் சேகரிக்க எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
