மைத்திரியுடன் மகிந்த நேற்றிரவு சந்திப்பு
வரவிருக்கும் அதிபர் தேர்தலில் கூட்டணி அமைத்துக் கொள்வது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும், நேற்றிரவு முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இந்தப் பேச்சு ஒரு சுமுகமான சூழ்நிலையில் நடைபெற்றது என்றும், வெற்றிகரமானதாக அமைந்தது என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நடத்தப்படும் பேச்சுக்களை எவ்வாறு தொடர வேண்டும் என்று தாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அறிவுறுத்துவதாகவும்,மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சந்திப்பில் உதவியாளர்கள் எவருமின்றியே இருவரும் தனியாகவே கலந்து கொண்டனர்.
பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பை வரும் 11 ஆம் நாள், ஏற்றுக் கொண்டு அதன் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை அறிவிக்கத் தயாராகியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
முன்னதாக கோத்தாபய ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவும் விரைவில் சந்தித்துக் கொள்ளவுள்ளனர் என தகவல் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.