அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய நடவடிக்கை
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக வழக்கு கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றில் நடந்து வருகிறது.
இந்தக் கடத்தல்கள் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிவானிடம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அட்மிரல் வசந்த கரன்னகொட தொடர்பான முடிவை எதிர்வரும் மார்ச் 8ஆம் நாள் தமக்கு அறியத் தர வேண்டும் என்று கோட்டே நீதிவான், கற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.