மேலும்

பதவி விலகிவிடுவேன் – ஐதேகவுக்கு மைத்திரி எச்சரிக்கை

maithriஊழல், மோசடிகளுக்கு எதிரான முடிவுகளை எடுக்கும் போது, தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், எல்லாப் பதவிகளையும் கைவிட்டு விட்டு மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்பேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

நிக்கவரெட்டியவில் இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

“சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் பல தவறுகளை இழைத்ததால் தான், 2015 தேர்தலில் அதன் வேட்பாளரை மக்கள் தோற்கடித்தனர். அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஐதேகவினரும் அதே தவறைச் செய்தால், மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகவே, முன்னைய ஊழல் ஆட்சியை தோற்கடித்து, புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தார்கள். அந்த இலக்கை அடைவதற்கு அனைவரும் சரியான பாதையில் பயணிக்க வேண்டும்.

நாட்டையும் மக்களையும் அரசியல் வாதிகள் நேசிக்க வேண்டும். அரசியல் அதிகாரம், தனியார் முகவர்களுக்காக வேலை செய்யக் கூடாது.

நான் ஒன்றும் அரசியலைப் பயிலும் நிலையில் இல்லை. 50 ஆண்டுகளாக அரசியலில் இருந்துள்ளேன். தூய்மையான நேர்மையான அரசியல் கலாசாரத்தை பின்பற்றுகிறேன்.

தேர்தலை பிற்போடுவதாக குற்றம்சாட்டப்பட்டாலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் தேர்தலைச் சந்திக்கவே விரும்புகிறது. அதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

19 ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது ஐதேகவில் வெறும் 47 உறுப்பினர்கள் தான் இருந்தனர். அப்போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அணியிடம் 142 வாக்குகள் இருந்தன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐதேகவினர் சிலர் சிறிலங்கா அதிபருக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுகளை அடுத்தே, அவர் இவ்வாறு காட்டமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *