சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் சீனாவின் கணினிகள் – உறுப்பினர்கள் பயன்படுத்த வசதி
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும், நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்துவதற்காக இணைய வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் பொருத்தப்படவுள்ளன.
நாடாளுமன்ற அவையில், இந்த வாரத்தில் இருந்து இணைய வசதிகளுடன் இந்த மடிக்கணினிகளைப் பயன்படுத்த முடியும் என்று, நாடாளுமன்ற நிதி பணிப்பாளர் ஜெயசாந்த தெரிவித்துள்ளார்.
‘நாடாளுமன்ற அவையில் உள்ள உறுப்பினர்களின் ஆசனங்களில் இந்த மடிக்கணினிகள் பொருத்தப்படும்.
இதற்காக சீனா அன்பளிப்புச் செய்த 265 கணினிகள் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்குக் கிடைத்துள்ளன.
வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு முன்னதாக, இந்தக் கணினிகள் உறுப்பினர்களின் ஆசனங்களுடன் பொருத்தப்படும்.
இது, நாடாளுமன்ற அமர்வுகளின் போது, உறுப்பினர்கள் நீண்ட நேரம் சபையில் அமர்ந்திருப்பதற்கு உதவியாக இருக்கும்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டு முன்னேற்ற அறிக்கைகள், ஆவணங்கள் குறுவட்டாக வழங்கப்படுகின்றன. கணினிகள் பொருத்தப்பட்டதும் அதனை சபையில் இருந்தவாறே அவர்கள் பார்த்துக் கொள்ள முடியும். விவாதங்களின் போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த மடிக்கணினிகள் ஒவ்வொன்றும் 140,000 ரூபா பெறுமதியானவை என்றும், சீனாவின் இந்த கொடையின் மொத்த மதிப்பு சுமார் 30 மில்லியன் ரூபா என்றும் அவர் மேலும் கூறினார்.