தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்கா- கோக கோலா விருப்பம்
தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்காவைப் பயன்படுத்த, அமெரிக்க நிறுவனமான கோக கோலா நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளது.
கோக கோலா நி்றுவனத்தின், ஆசிய பசுபிக் பிரிவுக்கான உதவித் தலைவர், ஜோன் முர்பி, சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கொழும்பில் சந்தித்து இதுதொடர்பாகப் பேச்சு நடத்தியுள்ளார்.
தெற்காசியாவில் அதிக சந்தைவாய்ப்பைக் கொண்டுள்ள கொக கோலா நிறுவனம், சிறிலங்காவில் உற்பத்தி மையத்தை ஆரம்பிப்பதற்கும், இங்கிருந்து இந்தியாவுக்கு தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் பல்வேறு மென்பானங்களை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சந்தைப்படுத்தி வருகிறது.
சிறிலங்காவில் இவற்றை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதில், கோக கோலா நிறுவனம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
எனினும், முதலீட்டுக்கான வரிவிதிப்பின் உறுதித்தன்மை தொடர்பாக, சிறிலங்கா நிதியமைச்சரிடம் கோக கோலா நிறுவனத்தின் உதவித் தலைவர் கவலையை வெளியிட்டுள்ளார்.
தற்போது, சிறிலங்காவில் ஒரே ஒரு நிறுவனமே, பழச்சாறுகளைப் பொதியில் அடைத்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியாவில் கோகா கோலா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், முக்கிய குடிநீர் ஆதாரங்களைச் சுரண்டி வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில், இந்த நிறுவனம் தமது உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்காவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.