யாழ்ப்பாணத்தில் இந்தியா அமைக்கும் 3000 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில், 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான உடன்பாட்டில், இந்தியாவும் சிறிலங்காவும் நேற்று கையெழுத்திட்டன.
சிறிலங்காவின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி முன்னிலையில், பதில் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்சியும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதியும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இந்த திட்டத்துக்காக 300 மில்லியன் ரூபாவை இந்தியா வழங்கவுள்ளது.
சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமையவே, இந்த உதவியை இந்தியா வழங்க முன்வந்துள்ளது,
இதற்கமைய யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 3000 குடும்பங்களுக்கு மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
அத்துடன், இந்த மழைநீர் சேகரிப்புத் தொட்டியின் செயற்பாடு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் பயிற்சிகளும் அளிக்கப்படும்.
இந்திய அரசின் கலந்தாலோசனையும் சிறிலங்கா அரசாங்கமே பயனாளிகளைத் தெரிவு செய்யும்.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் பயனாளிகள். பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், அண்மையில் மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களும் உள்ளடக்கப்படும்.
இந்த திட்டத்தினால் வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று இந்திய தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.