கும்பமேளாவில் பங்கேற்க வரும் 14ஆம் நாள் இந்தியா செல்கிறார் மைத்திரி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் நடக்கும் பிரபலமான, கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தியா செல்லவுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகான் விடுத்த அழைப்பை ஏற்று எதிர்வரும் 14ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உஜ்ஜெயின் செல்லவுள்ளதாக, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் எசல வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த கும்பமேளா நிகழ்வை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதன் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பரஸ்பர நலன்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
15 மாதங்களுக்கு முன்னர் சிறிலங்காவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மைத்திரிபால சிறிசென இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா அதிபர் இந்தியா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.