சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு முடக்கப்பட்டது ஏன்?
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருப்பதாக, தகவல் வெளியிட்டதாலேயே, சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவு நேற்று முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாவகச்சேரி வெடிபொருட்களுடன் தொடர்புடையவர்கள், இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று, சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளரை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தச் செய்தி வெளியானதும், சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்திய காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, இந்தச் செய்தியை வெளியிட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா காவல்துறை தரப்பில் இனிமேல் வாய்மூல அறிக்கைகள் எதுவும் வழங்கப்படக் கூடாது என்றும், எழுத்து மூல அறிக்கை ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் பணித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று நண்பகல் தொடக்கம் காவல்துறை ஊடகப் பிரிவின் தொலைபேசி இலக்கங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன.