ஒரு சில நாடுகளுடன் மட்டும் உறவை வைத்துக் கொண்டு முன்னேற முடியாது – சிறிலங்கா அரசு
முன்னைய அரசாங்கம் பதவியில் இருந்த போது சிறிலங்காவை எதிர்த்த நாடுகள் உள்ளடங்கலாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் தமக்குப் பக்கபலமாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க, “சில நாடுகளுடன் மட்டும் நெருங்கிய தொடர்புகளை வைத்துக் கொண்டு சிறிலங்காவினால் முன்னேறிச் செல்ல முடியாது.
புதிய அரசாங்கம் கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்காவின் அனைத்துலக உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளன.
அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் உதவிகளை சிறிலங்காவினால் இப்போது பெற முடிகிறது.
கடந்த காலங்களில் சீனா வழங்கிய உதவிகளை சிறிலங்காவினால் மறந்து விட முடியாது. ஆனால், சீனாவின் பின்னணியுடன் மட்டும் முன்னேறிவிட முடியாது என்று சிறிலங்கா உணர்ந்து கொண்டுள்ளது.
இந்தியாவுடனும் மிக நெருக்கமான உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம் என்று அரசாங்கம் கருதுகிறது.
அனைத்துலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றினாலும், இறைமையுள்ள நாடு என்ற வகையிலேயே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.