பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி
1979-ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” என்ற தலைப்பிலான புதிய சட்டமூலத்தை வெளியிடுவதற்கும், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஒரு புதிய சட்டக் கட்டமைப்பு தேவை என்ற சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட வரைவைத் தயாரிப்பதற்காக, முன்னதாக ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமிக்கப்பட்டிருந்தது.
பூர்வாங்க வரைவு தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2026 ஓகஸ்ட் 10 ஆம் நாள் சிறிலங்கா அமைச்சரவை கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியது.
சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு, பின்னர் சட்டமா அதிபரின் ஒப்புதலைப் பெற்ற நிலையில், அதனை சட்டமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
அதன்படி, சட்டவரைவை அரசிதழில் வெளியிட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
