மே 16 இற்குள் ரஷ்யாவிடம் எரிபொருளைக் கொள்வனவு செய்ய சிறிலங்கா முயற்சி
அமெரிக்க திறைசேரி ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு மே 16ஆம் நாள் வரை வழங்கியுள்ள, விலக்கைப் பயன்படுத்தி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் உரத்தை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரசாங்கங்களுக்கு இடையேயான கொள்வனவின் அடிப்படையில், கொள்வனவு ஆணைகளை வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுக்களை துரிதப்படுத்துமாறு ரஷ்யாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எண்ணெய், உரம் மற்றும் நிலக்கரியின் தற்போதைய உலகச் சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், சலுகை விலையில் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்வது குறித்து முன்னர் பேச்சுக்கள் நடந்த போதிலும், அமெரிக்க தடைக் கால வரம்புகள் காரணமாக, அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், உலகளாவிய எரிசக்தி விலைகளை நிலைப்படுத்தும் நோக்கில், ரஷ்ய எண்ணெய் விற்பனையை அனுமதிக்கும் காலஅவகாசத்தை மே 16, வரை அமெரிக்க திறைசேரி நீடித்துள்ளது.
இதையடுத்தே ரஷ்யாவிடம் எரிபொருள், எரிவாயு,உரம் போன்றவற்றை குறித்த காலப்பகுதிக்குள் கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மே 4 ஆம் நாள் சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதையடுத்து, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மே மாத நடுப்பகுதியில் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
