நாளை மறுநாள் இந்திய துணை குடியரசு தலைவரைச் சந்திக்கிறது தமிழ் அரசுக் கட்சி
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனை இலங்கை தமிழ் அரசுக் கட்சிப் பிரதிநிதிகள் நாளை மறுநாள் சந்திக்கவுள்ளனர்.
இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வரவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரைச் சந்தித்து, இருதரப்பு நல்லுறவு மற்றும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பாக, பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணியளவில், கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில், இந்திய துணை குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.
அதே தினம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளையும் இந்திய துணை குடியரசுத் தலைவர் சந்திக்கவுள்ளார்.
இந்திய – சிறிலங்கா உடன்பாட்டின் பிரகாரம், 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளிட்ட முக்கிய விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய துணை குடியரசுத் தலைவருடனான சந்திப்பின்போது வலியுறுத்தவுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
