அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி செர்ஜியோ கோர் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோர், இன்று காலை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள செர்ஜியோ கோர், அதிபர் செயலகத்திற்குச் சென்று, இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அமெரிக்காவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் தொடரும் மோதல் சூழல் மற்றும் இந்த நிகழ்வுகளினால் நாடு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்து, அமெரிக்க தூதுவருக்கு அதிபர் அனுரகுமார திசாநாயக்க விளக்கிக் கூறியுள்ளார்.
அதேவேளை, அமெரிக்க சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து, அமெரிக்க வணிக முதலீடுகள், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் சிறிலங்காவின் துறைமுகங்களை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் வர்த்தக உறவை ஆழப்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.

