மேலும்

கொழும்பில் தொடங்குகிறது இந்திய- சிறிலங்கா கடற்படை கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறிலங்கா இருதரப்பு கடல்சார் பயிற்சியான SLINEX-2025, நாளை மறுநாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

இரு நாடுகளின் கடற்படைகளும் 12ஆவது தடவையாக பங்கேற்கும் இந்தக் கூட்டுப் பயிற்சி, 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இந்தப் பயிற்சியின் முதலாவது கட்டமாக,  14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை துறைமுக பயிற்சிகளும், 17 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை, கொழும்பு கடற்பகுதியிலும், இடம்பெறும்.

இந்திய கடற்படையின், ஐஎன்எஸ் ஜோதி என்ற கடற்படை டாங்கர் கப்பலும், ஐஎன்எஸ் ராணா என்ற வழிகாட்டல் ஏவுகணை நாசகாரிக் கப்பலும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும்.

சிறிலங்கா கடற்படையின், எஸ்எல்என்எஸ் விஜயபாகு, எஸ்எல்என்எஸ் சயுர என்ற கடல்சார் ரோந்து கப்பல்களும்,  சிறிலங்கா விமானப்படையின் பெல்- 412 உலங்குவானூர்திகளும்,  இரு நாடுகளின் கடற்படைகளின் சிறப்புப் படைப்பிரிவுகளுடன் இந்தப் பயிற்சியில் பங்கேற்கும்.

கடற்பரப்பில் நடக்கும் பயிற்சியின் போது, மேற்பரப்பு துப்பாக்கிச் சூடு, தந்திரோபாய நடவடிக்கைகள்,  தேடல் மற்றும் மீட்புப் பயிற்சிகள் மற்றும் கடலில் சிறப்புப் படை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கடல்சார் பயிற்சிகள் இடம்பெறும்.

இதற்கு முன்னதாக, 11ஆவது SLINEX  கூட்டுப் பயிற்சி, விசாகப்பட்டினத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி  வரை நடைபெற்றது.

அதேவேளை சிறிலங்கா விமானப்படையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்படையின் டோனியர் விமானத்தின் உதிரிபாகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை ஏற்றிச் செல்வதற்காக இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் ராணா திருகோணமலை துறைமுகத்திற்கு நேற்று சென்றடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *