யோஷித ராஜபக்ச மீண்டும் சிறிலங்கா கடற்படையில்
சிறிலங்கா கடற்படையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த லெப். யோஷித ராஜபக்ச, மீண்டும் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என, கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் சமந்த சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்த லெப். யோஷித ராஜபக்ச, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் கோரிக்கைக்கு அமைய, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால், 2016 பெப்ரவரி 28 ஆம் நாள் தொடக்கம், பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், லெப்.யோஷித ராஜபக்சவை மீண்டும் கடற்படையில் இணைத்துக் கொள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, லெப்.யோஷித ராஜபக்சவை பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட அதேநாளில் இருந்து, மீளவும் கடற்படையில் இணைத்துக் கொள்ளும் அனுமதி கடிதத்தில், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா நேற்று கையெழுத்திட்டார் என்றும் லெப்.கொமாண்டர் சமந்த சூரிய பண்டார தெரிவித்தார்.