அமைதிகாப்பு பணியில் இருந்து சிறிலங்கா படைகளை நீக்க ஐ.நா அதிரடி முடிவு
சிறிலங்கா படையினரை ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்வதை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைதி காப்புத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. ஐ.நா பேச்சாளர் பர்ஹான் ஹக் நியுயோர்க்கில் நேற்று இதனை அறிவித்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்தே, ஐ.நா இந்த பதில் நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாதுகாப்புக்கு அவர்களின் பங்கு மிகஅவசியமானது என்ற சூழல் தவிர்ந்த நிலையில், சிறிலங்கா இராணுவத்தின் புதிய படைப்பிரிவுகள் இனிமேல் ஐ.நா அமைதிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படாது என்றும், ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
”தற்போது ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ அணி மற்றும் அதிகாரிகளை கொழும்புக்கு அனுப்பும் பணி அடுத்தமாதம் ஆரம்பமாகும்.
சுழற்சி முறையில், அவர்களின் பணி நிறைவுக் காலத்தின் அடிப்படையில், இவர்கள் வெளியேறுவார்கள். இவர்களுக்குப் பதிலாக புதிய படையினர் சிறிலங்காவில் இருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள்.
ஐ.நாவின் ஆறு அமைதிகாப்பு நடவடிக்கைகளில் சிறிலங்கா பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. ஆனால் அதனை லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், குழப்பி விட்டது.
அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மிகமோசமாக மீறியதாக மிக நன்றாக ஆவணப்படுத்தப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுகள் இருந்த போதும், லெப். ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு சிறிலங்கா அரசாங்கத்திடம் நாங்கள் கவலை வெளியிட்டிருந்தோம்.
இந்த நியமனத்தினால் எதிர்காலத்தில் சிறிலங்கா இராணுவத்தினரை ஐ.நா அமைதிகாப்பு பணிகளில் இருந்து , ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைத் திணைக்களம் இடைநிறுத்துகிறது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.