மேலும்

அவசர அமைச்சரவைக் கூட்டம் – ரணிலின் முயற்சி தோல்வி

நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு, அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

சிறிலங்கா அதிபரின் தலைமையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்திருந்தார்.

எனினும், அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த அரசியலமைப்பு திருத்தத்தை அவசரஅவசரமாக கொண்டு வருவதற்கு அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சஜித் பிரேமதாச ஆதரவு அமைச்சர்கள் இதற்கு தாம் இப்போது ஆதரவு அளிக்க முடியாது என்றும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் வெற்றியைப் பெற்ற பின்னர், கொண்டு வருவோம் என்றும் தெரிவித்தனர்.

இதனால், இந்த திருத்த வரைவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீளப் பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *