மேலும்

இன்னொரு கட்சிக்கு தாவி போட்டியிடமாட்டேன் – சஜித்

இன்னொரு கட்சிக்குத் தாவிச் சென்று அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று ஐதேகவின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று காலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இந்த வாரமோ அடுத் தவாரமோ, அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஐதேகவின் மத்திய குழு மற்றும் நாடாளுமன்றக் குழுவைக் கூட்டி, அதிபர் வேட்பாளரைத் தீர்மானிக்க வேண்டும்.

கட்சியில் உள்ள யாரேனும், அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பலாம். ஆனாலும், கட்சியின் மத்திய குழு மற்றும் நாடாளுமன்றக் குழு கலந்துரையாடியே இறுதி முடிவை எடுக்க வேண்டும்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறேன். மத்திய குழு மற்றும் நாடாளுமன்றக் குழுவின் பெரும்பான்மை ஆதரவு எனக்கு இருப்பதாக கருதுகிறேன்.

அங்கு இரகசிய வாக்கெடுப்பை  நடத்துவதானாலும், அதனை எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கிறேன்

அதிபர் வேட்பாளர் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இன்னமும் பதில் வரவில்லை.

ஐதேக ஒரு ஜனநாயக கட்சி என்பதால் எந்தவொரு வேட்பாளரும் மற்ற கட்சிகளுடன் சேர வேண்டிய அவசியம் இல்லை.

அதேவேளை, போட்டியிடுவதற்கு எனக்கு கட்சி வாய்ப்பளிக்காவிட்டால், போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வேன்.

நான் அரசியலுக்கு உகந்தவர் அல்ல, ஓய்வுபெற வேண்டும் என்று பொதுமக்கள் கோரினார், ஒக்டோபஸ் போன்று ஒட்டிக்கொண்டிருக்க மாட்டேன்.

பொதுமக்கள் என்னை இன்று வீட்டுக்குச் செல்லுமாறு கூறினாலும், நாளை வீட்டுக்குச் செல்வேன்.

ஐதேக ஒரு ஜனநாயக கட்சி. அது ஜனநாயக ரீதியாகவே செயற்படும். அதிபர் வேட்பாளர் தொடர்பான முடிவுகளால் கட்சிக்குள் எந்த நெருக்கடியோ, முரண்பாடுகளோ இல்லை” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *