கோத்தா இல்லையேல் தினேஸ் – மொட்டு கட்சி திட்டம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக தெரிவு செய்யப்படக் கூடியவர்களில் தினேஸ் குணவர்த்தனவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூத்த அரசியல்வாதியும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஸ் குணவர்த்தன, கூட்டு எதிரணியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளருக்கு முதல் தெரிவாக கோத்தாபய ராஜபக்சவே இருக்கிறார்.
எனினும், அவர் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான தகுதியைப் பெற முடியுமா என்பதில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.
கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை துறந்திருப்பது தொடர்பான முறைப்படியான அறிவிப்பை அமெரிக்க அதிகாரிகள் இன்னமும் வெளியிடவில்லை.
இந்தநிலையில், அவரால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தினேஸ் குணவர்த்தன நிறுத்தப்படக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.