மேலும்

கீத் நொயார் கடத்தல் வழக்கிலும் சிக்குகிறார் முன்னாள் புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ச

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில், முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி கோப்ரல் லலித் ராஜபக்சவையும் சந்தேக நபராக சேர்த்துக் கொள்ளுமாறு, குற்ற விசாரணை பிரிவுக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

மருதானையில் திரிபொலி முகாம் என்ற பெயரில் இயங்கிய புலனாய்வு முகாமில் இருந்த அதிகாரிகள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கை விசாரித்து வந்த குற்ற விசாரணைப் பிரிவினர், உபாலி தென்னக்கோனின் வாகனத்தில் கோப்ரல் லலித் ராஜபக்சவின் கைரேகைகள் பதிந்திருந்த நிலையில், அவரை கடந்த 7ஆம் நாள் இரவு கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கிலும் கோப்ரல் லலித் ராஜபக்ச தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதால், அவரை கைது செய்து  நீதிமன்றில் நிறுத்துமாறும், இந்த வழக்கில் சந்தேக நபராக அவரது பெயரையும் சேர்க்குமாறும் சட்டமா அதிபர் நேற்று குற்ற விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றவியல் சட்டக்கோவையின் கீழ், கீத் நொயாரை கடத்தியது, தாக்கியது, கொலை செய்ய முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகள், கோப்ரல் லலித் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்படவுள்ளன.

கோப்ரல் ராஜபக்ச இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமைக்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *