ரணிலுக்கும் தெரிவுக்குழு அழைப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தமக்கும் சாட்சியமளிக்க அழைப்பு விடுத்துள்ளது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு தொடர்பாக நடந்த விவாதத்தில் உரையாற்றிய போதே அவர், இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர், ஆனால் அவர் சாட்சியமளிக்கும் நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று கூறினார்.
இதனிடையே, நேற்று நடந்த விவாதத்தின் போது- தெரிவுக்குழுவின் அழைப்பை ஏற்க மறுத்த தயாசிறி ஜயசேகரவை, தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு சபாநாயகர் ஆலோசனை கூறினார்.
அத்துடன் தெரிவுக்குழுவின் அழைப்புக்கு மதிப்பளிக்குமாறும் சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.