புதிய தீர்மான வரைவு குறித்து மார்ச் 5இல் ஜெனிவாவில் முதல் கலந்துரையாடல்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மான வரைவு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் மார்ச் 5ஆம் நாள் இடம்பெறவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
மார்ச் 22ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் 20ஆம் நாள், சிறிலங்கா தொடர்பான விவாதம் இடம்பெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான, தொடர்ச்சியான தீர்மானம் ஒன்றை இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து முன்வைக்கப் போவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய தூதரகம், தீர்மான வரைவு தொடர்பான ஒரு முறைசாராக் கலந்துரையாடலை மார்ச் 5ஆம் நாள் ஜெனிவாவில் நடத்தவுள்ளது.
ஜெனிவா கூட்டத்தொடரின் பிரதான நிகழ்வுக்கு சமாந்தரமாக- இந்த பக்க அமர்வு ஜெனிவா நேரப்படி, காலையில் இடம்பெறவுள்ளது.
இறுதியான தீர்மான வரைவை முடிவு செய்வதற்கு முன்னதாக, குறைந்தபட்சம், மேலும் இரண்டு முறைசாராக் கலந்துரையாடல்களை நடத்த பிரித்தானிய தூதரகம் திட்டமிட்டுள்ளது.