மேலும்

மனோ, றிசாத், மலிக் அமைச்சர் பதவிகளை நிராகரிப்பு

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில், அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று மனோ கணேசன், றிசாத் பதியுதீன், மலிக் சமரவிக்ரம ஆகியோர் முடிவு செய்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மலிக் சமரவிக்கிரமவுமே, அமைச்சர் பதவிகளை ஏற்பதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அரசாங்கத்தில் பிரதமர், அதிபர் தவிர 28 அமைச்சர்களையே நியமிக்க முடியும். இதனால், கட்சி தாவிய உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளைக் கேட்பதால்,  புதிய அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறிகள் காணப்படுகின்றன.

இந்த நிலையிலேயே, மனோ கணேசன், றிசாத் பதியுதீன், மலிக் சமரவிக்ரம  ஆகியோர் அமைச்சர் பதவிகளை ஏற்பதில்லை  என்று முடிவு செய்திருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, இன்று காலை நடந்த ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்காக, தானும், றிசாத் பதியுதீனும் எந்த அமைச்சர் பதவியையும் ஏற்றுக் கொள்ளாமல் விடத் தயாராக இருப்பதாக, பிரதமர் ரணிலிடம் கூறியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *