மேலும்

சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பதவி வகிக்க முடிந்தது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணையப் போவதில்லை என்று முடிவு செய்துள்ள நிலையில், 101 ஆசனங்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்ற  இழுபறி ஏற்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கே இந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பொதுஜன முன்னணி வலியுறுத்தி வருகின்றது.

எனினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  அரசாங்கத்துக்கு தலைமை தாங்குகின்ற நிலையிலும், அமைச்சரவையின் தலைவராக அவரே  தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும்- தற்போதைய அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் தான் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் கூட்டு ஆட்சியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது.

எனவே  எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்கமாட்டோம்” என்றும் அவர்  தெரிவித்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஒரு கருத்து “சுமந்திரனின் புதிய வாதம்- சூடுபிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *