மேலும்

பதவியிழந்த அமைச்சர்கள் புடைசூழ இரணைமடுவுக்கு வந்த மைத்திரி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன், புனரமைப்புச் செய்யப்பட்ட கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் வான்கதவு ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால  சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

34 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கும் வசதி கொண்டிருந்த இரணைமடுக் குளம், தற்போது புனரமைக்கப்பட்டு, 36 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட இரணைமடுக் குளத்தில் முதல் முறையாக – நேற்று நள்ளிரவு நீர் 36 அடி உயர கொள்ளளவை எட்டியது.

இந்த நிலையில் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, புனரமைக்கப்பட்ட குளத்தின் வான் கதவு ஒன்றைத் திறந்து வைத்ததுடன், அங்கு நிறுவப்பட்டிருந்த நினைவுக்கல்லையும் திறந்து வைத்தார்.

இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் கொள்ளளவை விட ஒரு அங்குலமே அதிகமாக இருந்ததால், அரை அங்குலத்துக்கே சிறிலங்கா அதிபரால் வான்கதவு ஒன்றுமாத்திரம் திறந்து விடப்பட்டது.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் அண்மையில் பதவிஇழந்த அமைச்சர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினால் பதவியிழந்த அமைச்சர்களான, சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, சி.பி.ரத்நாயக்க, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபருடன் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *