சிறிலங்கா அதிபருக்கு ஆண்டு தோறும் மனநிலை பரிசோதனை – சரத் பொன்சேகா
அமெரிக்காவில் உள்ளது போன்று ஒவ்வொரு ஆண்டும், சிறிலங்கா அதிபரின் மனநிலையைப் பரிசோதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
”அமெரிக்காவில் அதிபரின் மனநிலை ஒவ்வொரு அண்டும் பரிசோதிக்கப்படும் நடைமுறை உள்ளது, இத்தகைய மனநிலைப் பரிசோதனைக்கு, அமெரிக்கா அரசின் மூத்த அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளும் உட்படுத்தப்படுகின்றனர்.
சிறிலங்காவிலும் அத்தகைய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். அதற்கேற்ற வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும்.
அப்படியென்றால் தான், நாட்டை ஆட்சி செய்பவருக்கு மனநிலைபாதிப்பு ஏற்பட்டால், அவரை உளநல நிபுணரிடம் அனுப்ப முடியும்.” என்றும் தெரிவித்தார்.